Wednesday 19 September 2012

சிங்கள அரசுக்கெதிரான புதிய யுத்தம்

ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக இலங்கை இனவெறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போரட்டமானது பல நாடுகளின் ஆளணி மற்றும் ஆயுதபல உதவியுடன் 2009 ஆம் ஆண்டு பல்லாயிரம் அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்து முடிவுக்குக் கொண்டுவரபட்டது.

விடுதலைப் புலிகளால் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்கள இனவெறி இராணுவத்தை விரட்டியடிக்க நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதெல்லாம் ஆட்சியில் இருக்கும் இனவாத அரசானது தனது பதில் தாக்குதல்களை அப்பாவிப் பொதுமக்களை நோக்கி திருப்பிவிடுவதையே தனது போர் தர்மமாக கொண்டிருந்தது.1983 ஜூலை 23 ஆம் திகதி விடுதலை புலிகள் தாய்மண்ணில் இருந்த இராணுவத்திற்கு எதிரான முதல் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களும் வன்முறைகளும் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டன,இக் கலவரத்தின் போது உயிருடன் எரிக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் 3000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதுடன்,பல கோடி பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டன ,ஒன்றரை இலட்சம் மக்கள் வீடுகள் இன்றி ஏதிலிகளாக்கப்பட்டு வீதியில் துக்கி வீசப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் உக்கிரம் பெற்றதுடன்
சிறு குழுவாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் ஒரு மரபு ரீதியான இராணுவமாக கட்டியெழுப்பப்பட்டது மட்டுமன்றி ஒரு தனி நாட்டை நிர்வகிக்கத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியதான ஒரு சிறந்த கட்டமைப்பொன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் நிறுவியிருந்தது என்பதே உண்மையாகும்.


தமிழர்களின் ஆயுதப்போராட்டம் வலுப்பெற்றதைத்தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்கள் ஆட்சிபீடமேறுவதற்கும், தமது ஆட்சியை தக்கவைப்பதற்கும் இனப்பிரச்சனையை ஒரு கருவியாக காலத்துக்கு காலம் பயன்படுத்திக்கொண்டனரே தவிர உண்மைத் தன்மையுடன் எந்த சிங்கள ஆட்சியாளரும் நடந்துகொள்ளவில்லை.போர் நிறுத்தங்கள் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் விடுதலைப் போரை பலவீனபடுத்தவும்,விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக காட்டிக்கொள்ளவும் இக்காலங்களை பயன்படுத்திக்கொண்டதுடன் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்க்கான எந்தவித ஆக்கபூர்வமான திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.விடுதலைப் புலிகளுக்கு பயங்கரவாதிகள் என்ற முகமூடியைப் போட்டதுடன் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு தடையினை ஏற்படுத்த தன்னாலான முழுமுயற்சியையும் மேற்கொண்டது. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு என்ற வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் பயங்கரவதத்தின் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட மக்களை மீட்பதற்க்கான "மனிதாபிமான நடவடிக்கை" என்றும் கூறிக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று புதைத்தது.


1956 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம்,இழந்த உயிர்கள்,உடமைகள் எண்ணில் அடங்காது,இவை எல்லாவற்றையும் விஞ்சியதாக 2005 ஆம் ஆண்டு  ஆட்சிபீடமேறிய ராஜபக்சவினதும் அவரினது சகோதரர்களாலும் 2009 ஆம் ஆண்டில் அரங்கேற்றிய  தமிழின அழிப்பே உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. பெருந்தொகையான மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள்  சிங்கள அரக்க இராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடைத்தது,அத்தியவசியப் பொருட்கள் மக்களைச்  சென்றடயாதவாறு தடுத்தது,காயமடைந்த மக்களுக்கு  மருந்துவ உதவிகள் சென்றடையாதவாறு  செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது  கனரக ஆயுதங்கள் மற்றும் செல் தாக்குதல்களை மேற்கொண்டது ."யுத்த தவிர்ப்பு வலயம்" என்று அறிவித்து அதனுள் தஞ்சமடைந்த மக்கள் மீது குண்டுகளைப் போட்டு கொன்றது. யுத்த தர்மங்களையெல்லாம் மீறி அரச பயங்கரவாதமானது  அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்ததை   சர்வதேச சமூகமும்,ஐக்கிய நாடுகள் சபையும் செய்மதிகள் ஊடாக கண்காணித்துக்கொண்டிருந்தனவே தவிர  அவர்கள் உடனடியாக பொதுமக்களைப்  பாதுகாக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை என்பதே பெரும் மனவருத்தம்தரும் விடயமாகும். இவ்வாறு யுத்த தர்மங்களை எல்லாம் மீறி குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள், கர்ப்பிணிகள்,வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி மிகவும் கொடூரமாக கொன்று புதைத்தது , இறுதியில் தஞ்சமடைந்தவர்களை பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை செய்து உயிருடன் புதைத்தது.இவ்வாறு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்று   பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததாக உலகிற்கு 18 மே 2009 இல்  அறிவித்து வெற்றிவாகை சூடியது மஹிந்த ராஜபக்ச அரசும் அதன் இராணுவமும்.

இன அழிப்பு யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் தமிழ் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாதவாறு கைதிகளாக வாழும் நிலையே காணப்படுகிறது.அரக்க குணம் கொண்ட சிங்கள அரசினதும் ,அதன் இராணுவதினதும்  கொடுமைகள் தமிழ் மக்களை பின் தொடர்ந்தவண்ணமே உள்ளது.தடுப்பு முகாமில் இருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை,கோத்தபாயவின் கீழ் இயங்கும் இரகசிய குழுவினால் கைதுசெய்யபட்டார்கள் என கருதப்படும் பல நூற்றுக்கணக்கானவர்களின் விபரம் மறைக்கப்பட்டுள்ளது,சொந்த இடங்களில் மீள் குடியமரத்தப்பட்டவர்களின் நிலையும் மாறவில்லை பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளக்கப்படுகிறார்கள், கைதுகள், காணமல் போதல், அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் முடிவின்றி தொடர்கின்றது. மேலும் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டுவதும்,தமிழர்களின் சொந்த மண்ணில் குடியேற்றங்களை மேற்கொள்வதும்,தமிழர் பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கீழ் நிலை பணியாளர்களில் இருந்து நிர்வாக தர உத்தியோகத்தர்கள்வரை சிங்களவர்களை நியமிக்கும் பணிகள் என்பன திட்டமிட்டு அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையில் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக எந்த அக்கறையும் கிடையாது, எம்மை பலவீனப்படுத்தி அடிமையாக வைத்திருக்கவே விரும்புகிறது.2008 ஆம் ஆண்டின் மாவீரர்தின உரையில் தேசியத்தலைவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான விடயம் "புலிகளை தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு போரை நடத்துகிறது ,தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு எப்படி சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது" என்று.உண்மையில் எமக்கு இன்று அரசியல் தீர்வுமில்லை,அச்சமின்றிய வாழ்வுமில்லை.இவ்வாறான அவலநிலை தொடருமானால் சிங்கள அரசுக்கெதிரான யுத்தமொன்று புதிய வழியில் தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது.


Thursday 13 September 2012

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..

பண்டைய உலகின் பெருமளவு நிலபரப்பை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வரலாறை வாசிக்கும் போது அவருடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும்கூட வியப்புக்குரியதாகவே இருக்கும். 

மேலும் அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்கிய அவர் மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார்.

பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.இவ்வாறு வெற்றி மகுடத்தையே சூடிக்கொண்ட மாவீரன் அலெக்ஸாண்டரால் மரணத்தை வெற்றி கொள்ளமுடியவில்லை அவ்மாவீரன் தனது 32 வது வயதில் மரணதேவனிடம் தோல்வியை தழுவிக்கொண்டார். 

 தான் படையெடுத்த எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.ஒருநாள் தன்னுடைய தளபதிகளை அழைத்து,"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

 அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பின் தனது விருப்பங்களை கூறினார். 

 முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்." 

 இரண்டாவது, "என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த,விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்". 

 மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்". இவைதான் எனது மூன்று ஆசைகள் என்று குறிப்பிட்டார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த தளபதிகளுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.ஆனால் ஒரு தளபதி தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். ஆனால், இதற்கான காரணத்தை அறிய நாங்கள் ஆவலாகவுள்ளோம் தாங்கள் எங்களுக்கு விளக்க முடியுமா " என்று கேட்டான், 

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார். 

"என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விடயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்தவொரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது என்பதை உலகிற்கு காட்டவும் .மரணத்தை எவராலும் நிறுத்த முடியாது.மரணம் ஒரு நிதர்சனமான உண்மை என்பதை புரிய வைக்கவும். 


 "வாழ்க்கையில் எவ்வளவு பணமும், பொருள், பிற செல்வங்களை சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்.மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக". 

"இவ் உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காகவே" என்றாராம். 

 ஆம் நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம். நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம். 

மாவீரன் அலெக்ஸ்சன்டரின் கருத்துக்களை பாடல் வரியாக அமைத்தரோ கவியரசு கண்ணதாசன்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, 
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..

ஊடக சுதந்திரம் இலங்கையில் இறந்துவிட்டது ...


இரண்டு வலைத்தள அலுவலகங்கள் பொலிசாரினால் சோதனையிடப்பட்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்தை வெளியிட்டமைக்காகவே கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கையினை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது முற்றாக மறுக்கப்பட்ட நிலமையே காணப்படுகிறது அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எவரும் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலமையே இன்றும் காணப்படுகிறது.கடந்தவருடம் நோவெம்பர் மதம் இதே போன்று தமிழ் இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்கள் தடை செய்யப்படது.


எந்தவொரு ஊடகங்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையே காணப்படுகிறது இதையும் மீறி கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதும் ஊடகவியாலாளர்கள் கைது செய்யப்படும் அல்லது கொலை செய்யப்படும் நிலை இங்கு இயல்பானதாக காணப்படுகிறது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் பத்திரிகை அலுவலம் பலதடவை தாக்கப்பட்டமை உலகம் அறிந்ததே.

எப்போது ஆட்கடத்தல்,கப்பம் பெறுதல்,படுகொலைகள் இலங்கையில் முடிவுக்கு வரும் ???

இலங்கை  ஜனாதிபதியின்  சகோதரனும் அரசு பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாயவினால்  உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நடாத்திவரும் ஆட்கடத்தல் நடவடிக்கையானது   பலதடவைகள் ஆதாரத்துடன்  ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டே உள்ளது ஆனால்  அதனை தடுத்து நிறுத்துவதற்கான  ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை  அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன் இவ்வாறான ஆட்கடத்தல்கள்,முறையற்ற  கைதுகள், பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் கொலைகள்   எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க   வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முற்போக்கு சோஷலிச கட்சியின் தலைவர்  கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கும் சிறப்பு ஆட்கடத்தல் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.

சர்வதேசத்தின் அழுத்தத்தின் மத்தியிலும் இவ்வாறான பல ஆட்கடத்தல்கள், காணமல் போதல், கப்பம் பெறுதல்,சித்திரவதைகள் ,கொலைகள், பாலியல் கொடுமைகள் என்பன நாளாந்தம் அரசின், அரச படைகளின்  ஆதரவுடன்  அரங்கேறிய வண்ணமே உள்ளது. இவற்றில் வெளிச்சத்திற்கு வருபவை ஒருசிலவே. பெரும்பான்மை இனத்தவருக்கோ அல்லது அரசியல் பலத்துடன் இருப்பவர்களுக்கோ இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் இவர்களின் பழிவாங்கல்கள் அவர்களின் எல்லைக்குள் இருக்கும்வரை மீண்டும் மீண்டும் தொடரும், இதற்கு உதாரணமாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் நிலையை குறிபிடலாம்.இது இவ்வாறிருக்க அப்பாவி தமிழ் மக்களின் நிலமை எவ்வாறு இருக்கும் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும்.

உள்ளூர் பத்திரிகைகளின் அடிப்படையில் பார்க்கும்போது முதல் அரையாண்டில் நடந்துள்ள ஆள்கடத்தல்கள் கானமல்போதல்களின்  எண்ணிக்கை 60 தைத் தொட்டுள்ளதை காணலாம். கோத்தபாயவின் கீழ் இயங்கும் விசேட பயிற்சி பெற்ற ஆட்கடத்தல் பிரிவினால் கைது செய்யபடுவோரில் பெரும்பாலானோர்  வீடு திரும்பி வந்ததாக வரலாறே இல்லை அதாவது இவர்களுக்கான நீதிமன்றம், நீதிபதி, விசாரணை , தீர்ப்பு எல்லாமே இவர்களே மேற்கொள்வார்கள் இறுதியில் திரும்பமுடியாத தூரத்துக்கு அனுபிவிடுவதுதன் இவர்களின் வேலை. 2006 ஆம் ஆண்டின் பின் நடந்த இன்றும் நடந்து கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்கள் அனைத்துக்கும்  மஹிந்த  ராஜபக்சவும் அவரின் சகோதரர்களுமே முழுப்  பொறுப்பு.

மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பம் ஆட்சியில் இருக்கும்வரை நீதிக்கு புறம்பான கைதுகள், ஆள்கடத்தல்கள்,   கொலைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள்  தொடர்ந்தவண்ணமே இருக்கும் என்பதுடன் இதுதொடர்பாக மேற்கொள்ளபடும் எந்தவொரு  உள்நாட்டு  விசாரணைகள்   எதுவும் நம்பகத்தன்மையுடன்   இடம்பெறும் என்று சற்றும் எதிர்பார்க்க முடியாது. இவர்களது குடும்ப ஆட்சியானது ஊழல் நிறைந்ததாக இருக்கும்போது எவ்வாறு இவர்களினால் அமைக்கபடும் விசாரணைக் குழுக்கள் நீதியாக இயங்கும் என எதிர்பார்க்க முடியும் ?

மஹிந்த ராஜபக்க்ஷவின் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் இவர்களை நிறுத்துவதன் மூலமே ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், படுகொலைகள் இலங்கையில் முடிவுக்கு வரும் என்பதுடன் மக்களின் உணர்வுகள், உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய மனிதநேயத்துடன் கூடிய  ஒரு அரசு அமைந்து  தமிழ் மக்களுக்கான உரிமைகள் வளங்கபடுவதன் மூலமே நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட முடியுமே தவிர உரிமைக்காக போராடுபவர்களை அடக்குவதன்  மூலம் ஒருபோதும் நாட்டில் அமைதி ஏற்படாது என்பதை  ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும்..